Jun 23, 2008

அசுத்த நீரால் 16 இலட்சம் பேர் இந்த வருடம் உயிரிழக்கும் அபாயம்

மக்கள் பருகும் குடிநீரை சுத்தமாக்குவதற்கு அரசாங்கங்கள் உரிய நடவடிக்கையை எடுக்கத் தவறினால், உலகில் இவ்வருடம் 16 இலட்சம் பேர் மரணமடைவர் என்று உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்திருக்கிறது.
நீர் தொடர்பான நோய்களால் தினமும் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தினமும் உயிரிழந்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் நீர், சுகாதார நிகழ்ச்சித் திட்டத்தின் இணைப்பதிகாரி ஜேம்ஸ் பேர்ட்ரம் நேற்றுமுன் தினம் திங்கட்கிழமை விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். வளர்ந்து வரும் நாடுகளில் மட்டுமல்லாமல் சகல நாடுகளையுமே நீர் மாசுறுதல் பிரச்சினை மோசமாக பாதித்து வருகிறது.
அபிவிருத்தியடைந்த வளர்ச்சி குன்றிய நாடுகளையும் இந்தப் பிரச்சினை பாதித்துள்ளது என்று பேர்ட்ரம் கூறியுள்ளார்.
சிங்கப்பூரில் சர்வதேச நீர் வாரம் நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகியுள்ளது.
காலநிலை மாற்றத்தாலும் நீருக்கான தேவை அதிகரித்திருப்பதாலும், தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்குவது தொடர்பாக அரசாங்கங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
200 கோடி மக்கள் அடிப்படை சுகாதார வசதிகளின்றி இருப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கி கணிப்பிட்டுள்ளது.
நீருக்கான தேவை அதிகரிப்பானது தண்ணீருக்கு தட்டுப்பாடு நிலவும் நாடுகளில் தாங்கிக் கொள்ள முடியாத நிலைமையை ஏற்படுத்துமென ஐ.நா. சுற்றாடல் நிகழ்ச்சித் திட்டம் அறிக்கையில் எதிர்வு கூறியுள்ளது.
உப்புக்களை அகற்றுதல், விசேட வடி கட்டல் முறைமைகள் உட்பட புதிய தொழில்நுட்பத்தை கையாள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும், நீர் தொடர்பான உள்சார் கட்டமைப்பை ஏற்படுத்தி பராமரிக்க அதிகளவு முதலீடுகளை அரசாங்கங்கள் மேற்கொள்ள வேண்டிய தேவை இருப்பதாக பேர்ட்ரம் சுட்டிக் காட்டியுள்ளார்.
கடந்த வருடத்தில் முதல் தடவையாக உலகின் 600 கோடி மக்களில் 50 சதவீதமானோர் குழாய் மூலம் நீர் பெற்றுள்ளனர். ஆனால், இந்த நீர் பாதுகாப்பானதாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் நாடுகள் சிங்கப்பூர் நீரைப் பயன்படுத்தும் விதத்தை முன்மாதிரியாக கொள்ள முடியுமென உலக சுகாதார ஸ்தாபனம் கருதுகிறது.

Thanks for Thinakural news paper